மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் சார்பில் வறுமை ஒழிப்புச் சங்கங்களின் செயல்பாடு தொடர்பாக குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகரில் இன்று(சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது.
மாநில அளவில் கிராமங்களில் உள்ள மகளிர்கள் சொந்த தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மகளிர்களை கண்டறிந்து அவர்கள் மூலம் வறுமை ஒழிப்பு சங்கங்கள் தொடங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதோடு, அச்சங்கத்தில் உள்ளவர்கள் என்னென்ன தொழில் செய்ய விரும்புகிறார்களோ அதற்கான பயிற்சி அளித்து நிதி உதவியும் அளிக்கப்படுகிறது. மகளிர்கள் சொந்த தொழில் செய்து தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் முதன்மைச் செயல் அலுவலர் வே.குமுதவள்ளி பங்கேற்று வறுமை சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும், மகளிர்கள் பயனடையும் வகையில் நிதி உதவி கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய இருக்கிறார்.
இக்கூட்டத்தில், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாநில ஊராக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர்கள், துணை திட்ட அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட ஊரக வாழ்வாதார திட்ட அலுவலகம் மூலம் செய்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.